ஈழத் தமிழ் பெண்களை பலாத்காரம் செய்த இந்திய அமைதிப்படை: கருணா
கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகள், ராணுவத்திற்கு இடையே போர் நடந்தபோது இந்திய அமைதிப்படையினர் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்நாட்டு அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க தலைவரும், இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையே போர் நடந்தபோது அமைதிப்பணியில் ஈடுபட இந்திய அமைதிப்படை இங்கு வந்தது. இந்திய அமைதிப்படை இலங்கையில் 1897ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இருந்தது. அப்போது அந்த படையினர் ஈழத் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர், தமிழர்களை கொலை செய்தனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை நம் நாட்டு கடற்படை திறமையாக தடுத்தி நிறுத்தி வருகிறது என்றார்.
பிரேமதாஸா இலங்கை அதிபராக இருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வெறும் 350 பேர் தான் இருந்தனர். அவர் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினார். அதன் பிறகே அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார் கருணா.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி தன் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தால் அந்த கட்சி குறித்த பல ரகசியங்களை வெளியிட தான் தயங்கப் போவது இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறினார். 2004ம் ஆண்டு தனியாக இயக்கம் துவங்கிய கருணா பிறகு அரசியல் கட்சியை நிறுவி ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்தார். இலங்கையில் ஆளும் கூட்டணியின் துணை தலைவராக உள்ளார் கருணா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications