சென்னையில் பாக்.உளவாளிகள் பிடிபட காரணமான தீவிரவாதியை இலங்கைக்கு நாடு கடத்தியது மலேசியா!
கொழும்பு: சென்னை, பெங்களூரில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதி முகமது ஹூசைன் முகமது சுலைமான் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டார். அவரிடம் இலங்கை புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்தியாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் உளவாளிகளை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் மலேசியாவில் கண்காணிக்கப்பட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைன் முகமது சுலைமான் என்ற தீவிரவாதியுடன் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்பில் இருப்பதாக அந்நாடு உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தது. இதனடிப்படையில் சென்னையில் ஜாஹீர் உசேன் என்ற உளவாளி சிக்கினான்.
இதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள முகமது ஹூசைன் முகமது சுலைமானை கைது செய்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த மே மாதம் முகமது ஹூசேனை மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முகமது ஹூசைன் முகமது சுலைமானை நேற்று முறைப்படி இலங்கைக்கு மலேசியா நாடு கடத்தியது. அதனைத் தொடர்ந்து சுலைமானிடம் அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு விசாரண நடத்தி வருகிறது.
இதனிடையே சுலைமானை ஒப்படைக்க கோரி இந்தியா, இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications