நிதி மோசடி புகார்: விசாரணைக் குழு முன்பு ஆஜரானார் மகிந்த ராஜபக்சே.. இன்று கைது?
கொழும்பு: நிதி மோசடி புகார் தொடர்பாக விசாரணைக் குழு முன்பு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நேரில் ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் கொழும்பில் பரபரப்பு நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலின் போது அரசு தொலைக்காட்சிகளில் மகிந்த ராஜபக்சே விளம்பரம் செய்திருந்தார். ஆனால் இந்த விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவர் செலுத்தாமல் மோசடி செய்தார் என்பது புகார்.
இது தொடர்பாக ஊழல்களுக்கான இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கெனவே மகிந்த ராஜபக்சேவின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி ஆணைக் குழு முன்பாக மகிந்த ராஜபக்சே ஆஜராகி உள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளதால் கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்சே கைது செய்யப்பட்டால் அதனைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் மற்றும் வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.