யாழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள்- இலங்கை ராணுவம் 'ஷாக்'
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது இலங்கை ராணுவத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 61 வயது. அவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் வெகுவிமர்சனையாக கொண்டாடுகின்றன. ஆனால் ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இன்றைய பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் நாளைய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் கண்களில் மண்ணை தூவி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரபாகரனின் 61வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் சிரித்த முகத்துடன் பிரபாகரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் "தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க" "தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க" ஆகிய வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமையன்று மாவீர்ர் நாள் நிகழ்வுகளை தடைகளை மீறி நடத்துவோம் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய ஜே.வி.பி.யினரும் கார்த்திகை வீரர் தினத்தை கடைபிடிக்கின்றனர். அதற்கு அனுமதிக்கும் போது உரிமைப் போரில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. மாவீர்ர் நாளை ஒட்டி வீடுகளில் நினைவுச் சுடரேற்ற முடியாதவர்கள் கோவில்களும் தேவாலயங்களிலும் தீபங்களை ஏற்றுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை ராணுவத்தின் தடையை மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் 'மாவீரர் நாள்' சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தங்களது கண்காணிப்பை மீறி பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் இலங்கை ராணுவத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications