விளையாட்டு வீரர் கொலையில் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன்.... விரைவில் கைது?
கொழும்பு: இலங்கை ரக்பி விளையாட்டு வீரரான தாஜூதீன் கொலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவுக்கு தொடர்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை மகிந்தவும் அவரது மற்றொரு மகன் நாமல் ராஜபக்சேவும் மறுத்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு தாஜூதீன் சென்ற வாகனம் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து உயிரிழந்தார். இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடர்ப்பட்டது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித ராஜபக்சேவுக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இலங்கை அரசியலை உலுக்கி வரும் இந்த வழக்கில் தாஜூதீன் உடலை தோண்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள மகிந்த ராஜபக்சே, தாஜூதீன் கொலைக்கும் மகன் யோஷிதவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதேபோல் ராஜபக்சேவின் மற்றொரு மகன் நாமல் ராஜபக்சே, தாஜூதீன் எங்கள் குடும்ப நண்பர்தான்; அவரது கொலைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இங்கிலாந்து வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதனிடையே நிதி மோசடி வழக்கில் நாமல் ராஜபக்சேவை போலீசார் விசாரணைக்கு அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.