மோடி வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே வீழ்ந்தார் - மைத்ரிபால வெற்றி!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேன சுமார் 4 லட்சத்து 49 ஆயிரத்து 72 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மைத்ரிபாலவுக்கு 51.28%; ராஜபக்சேவுக்கு 47.58% வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சே வெற்றிலை சின்னத்திலும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலும் போட்டியிட்டனர். இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டன.
முதல் கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன.
மைத்ரிபால சிறிசேனவுக்கு மிக அதிக அளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரிபால சிறிசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறிவிட்டார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மலையகத்தில் கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்டங்களிலும், அனுராதபுர, பொலன்னறுவ மாவட்டங்களிலும் மைத்திரிபாலவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
சிங்களர் பெரும்பான்மையினராக இருக்கும் அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல,காலி, ரத்தினபுரியில், மகிந்த ராஜபக்சேவின் கை ஓங்கி இருந்தது.
அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப் பிரியா, அதிபர் தேர்தலில் 51.28% வாக்குகள் பெற்று அதிகாரப்பூர்வமாக மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தார்.
வாக்கு விவரம்:
மைத்ரிபால சிறிசேன: 62,17,162 - 51. 28%
மகிந்த ராஜபக்சே: 57,68,090 - 47.58%












Click it and Unblock the Notifications