ராஜபக்சே குடும்பத்தினரின் 'செசல்ஸ்' சொத்துகள் குறித்து விசாரணை: இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் செசல்ஸ் நாட்டில் வாங்கியிருக்கும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் திட்டமிடல் மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் ஹர்சா டி சில்வா கூறியதாவது:
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செசல்ஸ் தீவில் வாங்கிக் குவித்த சொத்துகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும்.
இந்த விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. செசல்ஸ் நாடு, ஊழல் மற்றும் திருட்டு சொத்துக்களின் பாதுகாப்பான சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. இதனால் செசல்ஸ் முகவரிகளை கொண்டு சுவிஸ் நாட்டின் வங்கிகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியாக இருந்த போதே குற்றம்சாட்டி இருந்தேன்.
மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட செசல்ஸ் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கிகள் பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு ஹர்சா டி சில்வா கூறினார்.