கொழும்பில் ரணில் பிரமாண்ட வெற்றி! குருநாகலில் சைக்கிள் கேப்பில் ஜெயித்த ராஜபக்சே!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தாம் போட்டியிட்ட குருநாகலில் பெரும் போராட்டத்துக்கிடையே கரையேறியிருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவோ பிரதமராகிவிடுவோம் என்ற கனவில் குருநாகலில் களமிறங்கினார்.
மத்திய கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே 68, 479 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 11,489 வாக்குகளே கிடைத்தது.
அதே நேரத்தில் மகிந்த ராஜபக்சேவைத் தலைவராகக் கொண்டு குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 49.26% வாக்குகள் கிடைத்தது. இதன் மூலம் 8 இடங்கள் கிடைத்தன. இதில் ராஜபக்சேவும் ஒருவர். கடந்த 2010 தேர்தலில் இதே குருநாகலில் ராஜபக்சே கட்சி 10 இடங்களில் வென்றிருந்தது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியோ 45.85% வாக்குகளைப் பெற்று 7 இடங்களை அள்ளியது. இத்தனைக்கும் கடந்த தேர்தலில் இதே குருநாகலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற இடங்களை விட இது கூடுதலாக 2 இடங்களாகும்.
சைக்கிள் கேப்பில்தான் கரையேறியிருக்கிறார் ராஜபக்சே!