கோத்தபாய ராஜபக்சே அதிபராவதை இந்தியா விரும்பவில்லை- மாஜி முதல்வர் விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெறுவதை இந்தியா விரும்பவில்லை; அப்படி கோத்தபாய வெற்றி பெற்றாலும் இந்தியா, அமெரிக்கா ஆகியவை ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருக்கும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார். இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச களம் காணுகிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தமிழர் தரப்பு ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் முடிவாகவில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அதிபர் தேர்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை கோத்தபாய ராஜபக்சே அதிபராவதை விரும்பவில்லை. கோத்தபாய ராஜபக்சே அதிபரானால், ஈழத் தமிழருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் அவருக்கு நெருக்கடி தரும்.
ஆகையால் கோத்தபாய ராஜபக்சே அதிபராவது ஈழத் தமிழருக்கு நன்மைதானே தவிர தீமை எதுவும் இல்லை. ஒருவேளை அமெரிக்காவுடன் கோத்தபாயவுக்கு நல்லுறவு இருந்தாலும் அதுவும் ஈழத் தமிழருக்கு சார்பானதாகவே இருக்கும். அதுவும் புலம் பெயர் தமிழர்கள் அமெரிக்காவில் செல்வாக்கு செலுத்தி வருவதால் அந்நாடு ஈழத் தமிழருக்கு ஆதரவாகவே செயல்படும்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசதான் அதிபர் வேட்பாளருக்கான நல்ல தேர்வு என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications