தமிழக தலைவர்கள் கரடியாய் கத்த.... கச்சத்தீவில் கமுக்கமாக புதிய தேவாலயம் கட்டும் சிங்கள கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவை மீட்போம் என்கிற விவகாரம் தமிழக தேர்தல் களங்களில் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டும் பணிகளை இலங்கை கடற்படை தொடங்கி உள்ளது.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. இதற்கு எதிராக 30 ஆண்டுகாலமாக தமிழகம் குரல் கொடுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனியே 2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் இணைந்து பங்கேற்று வருகின்றனர்.
அந்தோணியார் திருவிழா
பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அங்கு போதுமான வசதி இல்லை. இதனால் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புதிய தேவாலயம்
இதனடிப்படையில் புதிய தேவாலயத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்களன்று நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படையின் வடக்கு பகுதி அதிகாரிகள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின், குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை கடற்படை
இலங்கை கடற்படைதான் புதிய தேவாலய கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை கடற்படை கப்பல்கள் மூலம் கச்சத்தீவில் இறக்கப்பட்டுள்ளன.
அன்று தமிழர் ஓய்வெடுத்த நிலம்
கச்சத்தீவைப் பொறுத்தவரை புதர்காடுதான். இருப்பினும் இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு முன்னர் வரை தமிழக மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது.