இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைப்பு? ஜூன் இறுதியில் தேர்தல்?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் அல்லது மே முதல் வாரத்தில் கலைக்கப்படலாம் எனவும் ஜூன் இறுதியில் தேர்தல் நடைபெறக் கூடும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அதிபர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்வினார்.
ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஆட்சி அமைத்தன.

கங்கணம் கட்டும் ராஜபக்சே தரப்பு
தற்போது பெரும்பாலான கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவுக்கு எதிராக நிற்கின்றன. இருப்பினும் மகிந்த ராஜபக்சே தரப்போ வரட்டும் நாடாளுமன்றத்தேர்தல்.. நாங்கள் ஒரு கை பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

எப்படியும் உடையும்ல...
அதாவது ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் கணிசமானவர்கள் தற்போது மைத்ரிபால பக்கம் இருக்கிறார்கள்.. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வரும் போது எப்படியும் இந்த ஆதரவாளர்களை தங்கள் வசம் வளைத்துவிட முடியும் என்பது ராஜபக்சே அணியின் கணிப்பு...

குடைச்சல் கொடுக்கலாமே..
இவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டால் மைத்ரிபால சிறிசேனவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க முடியும் என்பதும் அவர்கள் வியூகம்..

நாடாளுமன்றம் கலைப்பு- தேர்தல்
இந்த பரபரப்பான காட்சிகள் இனி அரங்கேறப் போகிறது... அடுத்த வாரமோ அல்லது மே முதல் வாரத்தில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. ஜூன் மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications