ராஜபக்சேவுக்காக அழுதோம்தான்..பிரேதத்தை வீட்டுலயா வைப்பாங்க? கேட்பது ஆதரவாளர் விஜித்த முனி
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதற்காக அழத்தான் செய்தோம்.. அதற்காக பிரேதத்தை வீட்டிலா வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று இலங்கை எம்.பி. விஜித்த முனி சோய்சா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியும் அவரை கை கழுவிவிட்டது. அக்கட்சியில் ஒரு சிலர்தான் இன்னமும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் அதிபர் மைத்ரிபால சிறிசேன பக்கம் சாய்ந்துவிட்டனர்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சேவை ஆதரித்து வந்த எம்.பி. விஜித்த முனி சோய்சா, நமது வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவர் மீது அன்பு இருந்தது.
அவர் இறந்துவிட்டதற்காக அழுதுவிட்டோம். அன்பு இருக்கிறது என்பதற்காக பிரேதத்தை வீட்டில் வைக்கவா முடியும்? அதுபோல ராஜபக்சே தேர்தலில் தோற்றதற்காக நாங்கள் அழுது முடித்துவிட்டோம். இனி அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்றார்.