இலங்கை புதிய அதிபர் மைத்ரிபாலவுக்கு தோற்றுப் போன ராஜபக்சே வாழ்த்து!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ள மைத்ரிபால ஸ்ரீசேன இன்று மாலை அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்த நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே, தோல்வியை ஒப்புக் கொண்டு மைத்ரிபாலவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவினார். தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருவாரியான வாக்குகள் மைத்ரிபாலவுக்கு கிடைத்துள்ளன. சிங்களர் வாழும் தென்னிலங்கையில் மைத்ரிபாலவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.

தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாட்டை நல்வழியில் அழைத்துச் செல்வேன் என்றும் மைத்ரிபால தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வென்றுள்ள மைத்ரிபாலவுக்கு தொலைபேசி மூலம் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேர்தலில் தோல்வி என்று தெரிந்த உடனேயே அதிகாரப்பூர்வமான அலரி மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராஜபக்சே, அதிபர் பொறுப்புகளை அமைதியான முறையில் மைத்ரிபாலவிடம் ஒப்படைப்பதாகவும் அவரது அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ராஜபக்சேவின் நமல் ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில், 'ஜனநாயகத் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்; இதுவரை எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications