இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று இரவு முதல் வெளியாகிறது!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் எனவும் இதன்படி, முதலாவது தபால் வாக்கு முடிவை இரவு 11 மணி முதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் துணை தேர்தல் கமிஷனர் எம்.எம்.மொஹமது தெரிவித்தார்.
தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் மதியத்திற்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை துணை தேர்தல் கமிஷனர் மொஹமது கூறியதாவது: இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும். நாடுமுழுவதிலும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 1,600 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 195,000 அரசாங்க ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் 125,000 ஊழியர்கள், வாக்களிப்பு நிலையங்களிலும், 70,000 ஊழியர்கள் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தபால் வாக்குகள், திங்கள்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு எண்ணத்தொடங்கப்படும். இரவு 11 மணியில் இருந்து நள்ளிரவுக்குள், அதன் ரிசல்ட் வெளியாகும். தொகுதிவாரி வாக்குகள் நிலவரம் நாளை காலை எண்ணப்பட தொடங்கி, மதியத்துக்குள் ரிசல்ட் வெளியாகும். அத்துடன் விருப்பு வாக்குகளின் முடிவு செவ்வாய் இரவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.