இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 28 பேர் விடுதலை!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 28 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 43 பேர் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் 9-ந் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று 43 பேரும் யாழ்ப்பாணம் பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 28 மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதர மீனவர்கள் நாளை விடுதலையாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் தமிழக மீனவர்களின் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை. தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் அதனால் இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.