இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள் விடுதலை
யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையிலடைப்பது தொடர் கதையாகி வருகிறது. மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்த உடனேயே மறுநாள் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 18-ந் தேதியன்று தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று 24 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை ஊர்க்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதே நேரத்தில் மீனவர்களின் 6 படகுகளை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக உதவியுடன் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப உள்ளனர்.