இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை வீரர் திடீர் மரணம்… நீர்மூழ்கி பயிற்சியின் போது பரிதாபம்!
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை வீரர் திடீரென மரணம் அடைந்துள்ளார். நீர்மூழ்கி பயிற்சியின் போது அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு: இந்தியாவிலுள்ள கடற்படைத் தளம் ஒன்றில் இடம் பெற்ற பயிற்சி ஒன்றின் போது, இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கடற்படை வீரர் வை.பி.என்.ஆர். வீரசிங்க. நீழ்மூழ்கி பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது நேற்று மரணமடைந்ததாக இந்தியக் கடற்படை தெரிவித்திருக்கின்றது. அரபிக் கடற் பகுதி கடற்படைத் தளத்தில் இந்தப் பயிற்சி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்தேறியுள்ளது. இது வழக்கமான ஒரு பயிற்சி என்றாலும், இதில் கடற்படை வீரரே மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரசிங்க, நீண்ட நேரமாக வெளியே வராததால் பதற்றமடைந்த இந்தியக் கடற்படையினர் உடனடியாக நீரில் குதித்து தேடுதலை நடத்தினார்கள். உயிருடன் அவர் மீட்கப்பட்டு முதலுதவியும் அளிக்கப்பட்டது. பின்னர் கடற்படை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கடந்த 3ஆம் தேதி முதல் இந்தப் பயிற்சியில் இலங்கையைச் சேர்ந்த கடற்படை வீரர் இடம் பெற்று வருகின்றனர். இந்த மரணம் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மரணம் குறித்து விசாரணையை நடத்துவதற்காக இந்தியக் கடற்படை விசாரணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.