இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கும், இலங்கை தேர்தலுக்கும் உள்ள 6 வித்தியாசம்!
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17இன்று நடைபெறுகிறது. இந்தியா உள்ளிட்ட, மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்றே வித்தியாசமானது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், போன்ற நாடுகளில் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். நமது நாட்டில், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை வாங்கியவர் யாரோ அவரே தேர்வு செய்யப்படுவார்.

விகிதாச்சாரம்
பாகிஸ்தானிலும் இதே போல தொகுதிவாரித் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு சில உறுப்பினர்கள் நியமன முறையில் நியமிக்கப்படுகிறார்கள்.நேபாளத்தில் பெரும்பாலும் நேரடியாகத் தொகுதிவாரியாகவும், சில உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்தெடுக்கப்படுவார்கள். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் தொகுதிவாரியான தேர்தல்களை நடைபெற்ற பிறகு சில உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

அரசியல் சாசன மாற்றம்
இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின. அந்தப் புதிய அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விகிதாச்சார அடிப்படையில் நடைபெற ஆரம்பித்தன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். அந்தத் தேர்வு இரண்டுகட்டமாக நடைபெறும்.

வாக்குச்சீட்டு
தேர்தல் நாளன்று வாக்காளர்க்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அதில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அவர்களின் சின்னங்களும் இருக்கும். அதற்குக் கீழே வேட்பாளர்களுக்குரிய எண்களும் காணப்படும். முதலாவதாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் குறியிட்டு தமது வாக்கை பதிவு செய்வார்கள்.

விருப்ப வேட்பாளர்கள்
பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ் பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் குறிப்பிட்ட அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஓருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என தாம் விரும்பும் வேட்பாளர்களுக்குரிய இலங்கங்கள் உள்ள கட்டத்தில் ‘x' எனக் குறித்து தமது விருப்ப வாக்கை வழங்குவார்கள். வாக்களார்கள் தனது விருப்ப வாக்கை வழங்காமலும் விடலாம்.

செல்லாத ஓட்டு
வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டவுடன் முதலாவதாக தாம் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கான வாக்கைச் கட்டாயம் குறியிட்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் அந்த வாக்கு செல்லாத வாக்காகிவிடும். அதேபோன்று விருப்ப வாக்கு என்று வரும்போது, மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக குறியிட்டு வாக்கைப் பதிவு செய்தால் அந்த வாக்கும் உறுப்பினர் தேர்வுக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்படும்.

தேர்தல் மாவட்டங்கள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிவாரியாக இல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் நடைபெற்றாலும் நாடு முழுவதும், பல தேர்தல் மாவட்டங்களாப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்படும்.

போனஸ்
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் போனஸ் இடங்களும் வழங்கப்படும். மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்களும், 36 உறுப்பினர்கள் போனஸ் இடங்களில் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

நியமன உறுப்பினர்கள்
இப்படி தேர்வு செய்யப்பட்ட 196 பேர் தவிர மீதமுள்ள 29 பேர் தேசியப் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெறுவார்கள். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் விகிதாச்சார அடிப்படையில் தேசியப் பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications