2018ம் ஆண்டுக்குள், தமிழர் நிலங்கள் அனைத்தும் திருப்பி தரப்படும்: இலங்கை அமைச்சர் உறுதி
கொழும்பு: ராணுவம் வசம் உள்ள நிலங்கள் 2018க்குள் தமிழர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமர வீரா கூறினார்.
ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து பேசப்பட்டது.
போரின்போது தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு ராணுவம் வசம் உள்ள நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையர் வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை ஐரோப்பிய யூனியனும் முன்வைத்தது. மேலும், நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா கொழும்பில் இன்று கூறியது:
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசின் நிர்வாகக்குழு தாமதப்படுத்துவதாக கூறுவது தவறு. அந்த குழுவில் பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். ராணுவம் வசம் உள்ள நிலங்கள் 2018க்குள் தமிழர்கள் வசம் ஒப்படைக்கப்படும். சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட அரசு தயாராக உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில் அரசு துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்குமானால் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராணுவத்தினரின் பிடியில் இருந்த 701 ஏக்கர் நிலம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், 201.3 ஏக்கர் நிலங்கள், அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. இவ்வாறு சமரவீரா தெரிவித்தார்.
உள்நாட்டு போரின்போது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்தது. சிரிசேனா தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு படிப்படியாக நிலங்கள் திருப்பி தரும் பணி தொடங்கியது. 2018க்குள் அனைத்து நிலங்களும் திருப்பி தரப்படும் என தற்போது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.