ராணுவத்தில் இணையுமாறு நிர்ப்பந்திக்கின்றனர்: இலங்கையில் தமிழ் பெண்கள் கண்ணீர்
கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தினர் தங்களை ராணுவத்தில் இணையுமாறு நிர்ப்பந்தித்து வருவதாக கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சி புழுதி ஆற்றிலிருந்து மாயவனூர் கிராமத்துக்கு ஏற்று நீர்ப்பாசனம் மூலம் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த திட்டம் குறித்து ஆராய்வதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையுடன் அங்கு சென்றிருந்தார்.

புழுதி ஆற்றினைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர், அதன் பின்னர் மாயவனூர் கிராம மக்களை சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, அந்த கிராமத்தினைச் சேர்ந்த இளம் பெண்கள் பலரும் கண்ணீருடன், இலங்கை ராணுவத்தினர் தங்களை இணுவத்தில் இணைய வேண்டும் அல்லது வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் வேலை செய்ய வரவேண்டும் என நிர்ப்பந்தித்து வருவதாக கூறினர். ராணுவத்தினர் கொடுக்கும் அழுத்தங்களில் இருந்து தங்களால் மீள முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கை அரசாங்கம் போர்க்காலத்தில் அதிகமான ராணுவத்தினரை உள்வாங்கிய நிலையில் தற்போது ராணுவம் உப்பிப்போயுள்ளது.வலுக்கட்டாயமாக ராணுவத்தில் பெண்களை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
போருக்குப் பின்னர் ராணுவத்தின் தேவையில்லை என்ற நிலையில் இவ்வாறான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் எதற்காக அரசாங்கம் ஈடுபடவேண்டும். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது.
இதேவேளை வட்டக்கச்சியில் உள்ள விவசாயப் பண்ணை எமது விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமானது. அதனை ராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எமது பெண்களை அங்கு வேலைக்கு வருமாறு நிர்ப்பந்திக்கின்றது. இந்த நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றார்.












Click it and Unblock the Notifications