தமிழ் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே சிங்களர் தாக்குதல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
கொழும்பு: இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே சிங்களர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அளுத்கம, பேருவளையில் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
அளுத்கம தர்காநகரிலும் பேருவளையிலும் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த கவலையைக்குரியவை; மனதை சஞ்சலத்துக்கு உட்படுத்துபவை.
முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதல்களுக்கு இலக்காகி பலத்த சேதமடைந்திருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதி வழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை.
இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக் கூடிய இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள நடைபெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசைக் கோருகின்றது.
இவ்வாறு இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.