தனி நாடு கோரவில்லை - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு
கொழும்பு: நாங்கள் தனி நாடு கோரவில்லை, பிரிவினை கோரவில்லை. சுயாட்சியைத்தான் கோருகிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு உள்ளிட்ட 3 மாகாணங்களுக்கான தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் வடக்கு மாகாண முதல்வர் பதவிக்கு விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. இந்த நிலையில் அக்கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அறிக்கையை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,
இலங்கையில் பிரிவினையை அல்ல, சுயாட்சியையே கோருகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும், வட கிழக்கிற்கு சுயாட்சி நிர்வாகம் அளிக்க வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை இலங்கை அரசு இதுவரை முன்வைக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு வடபகுதி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் பற்றிக்கூட, இலங்கை அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. தமிழ் மக்களை ஏமாற்றாமல், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்றார்.