இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர் பகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு
கொழும்பு: தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நல்ல வாக்குப்பதிவாகியுள்ளது.
இலங்கையின் 15வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.
இலங்கை 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து நடத்தப்படும் 15வது பொதுத் தேர்தல் இதுவாகும். நாடாளுமன்றத்திற்கு 196 பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக (மொத்த பிரதிநிதிகள் எண்ணிக்கை 225) இன்று நாடு முழுவதிலுமுள்ள ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில்தான் முன்னாள் அதிபர், ராஜபக்சே போட்டியிடுகிறார்.
நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 12,314. இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 1,50,44,490.
தேர்தலுக்காக 22 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாட்டின் வடக்கு பகுதிகளான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகள் மீது சர்வதேச பார்வையாளர்கள் கவனம் உள்ளது. ஏனெனில் இவையெல்லாம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள். சில காலம் முன்புவரை தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆட்சியில் இருந்த பகுதிகள்.
இங்கும், தமிழர்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பது வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. இன்று காலை 7மணிமுதல் மதியம் 1மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 48 வீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 44 வீதமும்,கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 52 வீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.