எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்- ஶ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நாளை விசாரணை- மீண்டும் மன்னிப்பா?
ஶ்ரீவில்லிப்புத்தூர்: இந்து அறநிலையத் துறை பணியாளர்கள் வீட்டு பெண்களை இழிவாகப் பேசியதால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கின் விசாரணை நாளை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
2018-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணியின் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களை இழிவாக பேசினார். அத்துடன் அவர்களது வீட்டு பெண்களையும் மிக மோசமாக விமர்சித்தார் எச்.ராஜா.
எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் எச்.ராஜா மீது போலீசிலும் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் எச்.ராஜா மீது ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் எச்.ராஜா விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. ஒரு விசாரணைக்கு கூட எச்.ராஜா ஆஜராகாததால் கடந்த 7-ந் தேதி நீதிபதி பரம்வீர், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதனிடையே நீதிமன்ற உத்தரவுப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தை இழிவாக விமர்சித்துப் பேசியிருந்தார் எச்.ராஜா. புதுக்கோட்டை திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளில் விமர்சித்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கும் பதிவு செய்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினார் எச்.ராஜா. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் பேசினேன். அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். அந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அது தவறு என உணர்ந்தேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என கூறியிருந்தார் எச்.ராஜா இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நாளைய வழக்கிலும் எச்.ராஜா மன்னிப்பு கேட்பாரா என்பதும் தெரியவில்லை.