நடுக்காட்டில் வழிதெரியாமல் சிக்கிய 2 ஆண்கள்.. விமானம் மூலம் மீட்ட போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா வைரஸ் மீண்டும் கொஞ்சமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
சிட்னியில் டெல்டா வகை வைரஸ் பரவி வருவதால் அங்கு இரன்டு வாரங்களுக்கு ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது.

வனப்பகுதியில் சிக்கினார்கள்
இந்த நிலையில் சிட்னியின் தெற்கே உள்ள ராயல் தேசிய பூங்காவில் வனப்பகுதியில் இரண்டு ஆண்கள் வெளியே வர வழி தெரியாமல் சிக்கி கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவசர சேவை விமானங்கள் மூலம் அவர்களை தேடினார்கள். இறுதியில் உள்ளே சிக்கி இருந்த இருவரையும் கண்டுபிடித்தனர்.

நிர்வாண நிலை
அப்போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இரண்டு பேரும் உடலில் துணிகள் ஏதும் அணியாமல் நிர்வாண நிலையில் இருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மேலும் சில தகவல்கள் தெரியவந்தது. அதாவது 30 மற்றும் 49 வயதுடைய அந்த நபர்கள் இருவரும் தெற்கு கடற்கரையில் நிர்வாண நிலையில் சன்பாத்(சூரிய குளியல்) எடுத்துள்ளனர்.

அபராதம் விதித்தனர்
அப்போது மான் ஒன்று வந்தது. இதனால் திடுக்கிட்ட அவர்கள் நிர்வாண நிலையில் காட்டுக்குள் ஓட்டம் பிடித்தனர். அதன்பின்பு அங்கு இருந்து வழிதெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். சிட்னியில் ஊரடங்கு போடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை மீறியதற்காக அந்த இரன்டு நபர்களுக்கும் போலீசார் 1,000 டாலர்கள் அபராதம் விதித்தனர்.

போலீசார் எச்சரிக்கை
இவர்கள் மிகவும் முட்டாள்தனமானவர்கள் என்று சிட்னி போலீஸ் கமிஷனர் மிக் புல்லர் தெரிவித்தார். இவர்கள் இரண்டு பேரும் சரியான காரணமின்றி ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்பட செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கை மீறி கடற்கரையில் திரண்ட 44 ஜோடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications