ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தஞ்சாவூர் இளைஞர்.. நீதி கேட்டு வழக்கு
ஆஸ்திரேலியாவில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஹமத்துல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து அதிராம்பட்டினம் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திவிட்டு, அதே கத்தியில் போலீஸாரை தாக்க முயன்ற தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர்மீது, அந்த நாட்டு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். ரஹமத்துல்லாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அங்கு வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவர், இறந்துவிட்டார். இவரின் மனைவி ஆமினாம்மாள். இந்தத் தம்பதிக்கு அப்துல்ஹனி, ரஹமத்துல்லா என இரு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

மூத்த மகன் அப்துல்ஹனி சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இளைய மகன் ரஹமத்துல்லா பிரிட்ஜிங் விசாவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் ரஹமத்துல்லா, ஆஸ்திரேலியா நாட்டில் தூய்மைப் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டு போலீஸார் சுட்டதில் ரஹமத்துலா உயிரிழந்திருக்கிறார். வேலைக்காகச் சென்ற தஞ்சாவூர் இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸ் சுட்டதில் உயிரிழந்த சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஹமத்துல்லா, தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். அதிராம்பட்டினத்தில் அவர்மீது எந்த புகாரும் இல்லை. வீண் சண்டைக்குச் செல்லமாட்டார். ரஹமத்துலாவுக்கும், அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதனால் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மைப் பணியாளரை ரஹமத்துல்லா கத்தியால் தாக்கியதாகவும், ரத்த வெள்ளத்தில் கிடந்த தூய்மைப் பணியாளரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஹமத்துல்லா அதே கத்தியுடன் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடியதாகவும், அங்கிருந்த காவல்துறையினரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ரஹமத்துல்லாவை மூன்று முறை துப்பாக்கியில் சுட்டனர். இதில் ரஹமத்துல்லாவின் நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ரஹமத்துல்லா உயிரிழக்கும் அளவிற்கு சுட்டது ஏன் என்று இந்திய தூதரக அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஹமத்துல்லாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சுந்தர் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ரஹமத்துல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து அதிராம்பட்டினம் காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications