கடைசி பாலுக்கு பின் பெவிலியன் போன வீரர்கள்.. திரும்பி வாங்க.. உத்தரவிட்ட நடுவர்! மிகப்பெரிய ட்விஸ்ட்
சிட்னி: வங்கதேசம் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டி இன்று கடைசி பால் வரை திரில்லிங்காக சென்றது. ஒருபடி மேலே போய் கடைசி பாலுக்கு பின்பாகவும் ஆட்டத்தில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது.
2022 டி 20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக சில ஆட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் மீதம் உள்ள ஆட்டங்கள் பெரும்பாலும் திரில்லிங்காக இருக்கிறது.
அதிலும் பல போட்டிகள் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக செல்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டி கடைசி பால் வரை போய், இந்தியா வென்றது.
பாகிஸ்தான்
ஜிம்பாபே - பாகிஸ்தான் ஆட்டமும் கடைசி பால் வரை சென்றது. இதில் ஜிம்பாப்பே வென்றது. கடைசி ஒரு பாலில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையோடு இன்று ஜிம்பாப்பே வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. இந்த மேட்சும் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்றது.
வங்கதேசம்
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவரில் 150/7 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் அணியில் ஓப்பனிங் வீரர் ஷாண்டோ 71 ரன்கள் எடுத்தார். ஆபீப் ஹுசைன் 29 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்பே அணி தொடக்கத்தில் ரன்கள் கொடுத்தாலும் கடைசியில் நன்றாக பவுலிங் செய்தது. நக்ரவா, முஷ்ரபாணி ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர். இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
பெவிலியன்
இதையடுத்து ஜிம்பாப்பே அணி பேட்டிங் செய்த போது தொடக்கத்தில் திணறினாலும், மிடில் ஆர்டரில் சியான் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஜிம்பாப்பே அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் செல்ல கடைசி பாலில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. இந்த நிலையில் முஷ்ரபாணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அந்த கடைசி பாலில் முஷ்ரபாணியை வங்கதேச கீப்பர் நூருல் ஸ்டம்பிட் செய்தார்.
ட்விஸ்ட்
இதையடுத்து வென்றுவிட்டோம் என்ற உற்சாகத்தில் வங்கதேச வீரர்கள் பெவிலியன் நோக்கி சென்றனர். ஜிம்பாப்பே வீரர்களும் தோல்வி அடைந்த சோகத்தில் பெவிலியன் சென்றனர். இவர்கள் பவுண்டரி லைனை தாண்டி சென்று கைகுலுக்கிக்கொண்டு இருந்த போது திடீரென நடுவர்கள் இவர்களை மீண்டும் வரும்படி அழைத்தனர். மீண்டும் வந்து கடைசி பந்தை போடும்படி அழைத்தனர். இதனால் வங்கதேச வீரர்கள் குழம்பிப்போனார்கள்.
ஜிம்பாப்பே
கடைசி பந்தில் ஸ்டம்பிட் எடுக்கும் போது, நூருல் பந்தை ஸ்டம்பிற்கு முன் வந்து பிடித்தது ரிப்ளேயில் தெரிந்தது. இதன் காரணமாகவே மீண்டும் வந்து பந்தை போட சொன்னார்கள். அந்த பால் நோ பால் என்பதால் எடுக்க வேண்டிய ரன்கள் 4 என்று ஆனது. கடைசி பாலில் பவுண்டரி எடுத்தால் வெற்றி. அதோடு அது ப்ரீ ஹிட் வேறு. ஆனால் முஷ்ரபாணி அந்த பாலில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் வங்கதேசம் அணி வென்றது (மீண்டும்). கடைசி பாலில் நடந்த இந்த டிராமா பெரும் கவனம் பெற்றது.