சுட்டெரிக்கும் வெயில்: தப்பிக்க இதை ஃபாலோ பண்ணுங்க.. போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து பணியாளா்கள் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் வெயில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. தர்பூசணி, இளநீர், மோர், கம்மங்கூழ், கரும்பு சாறு என வீதிகள் தோறும் புதிய புதிய கடைகள் போடப்பட்டு வருகின்றன.

மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் சில பள்ளிகளில் நிறைவடைந்துள்ளன. சில பள்ளிகளில் ஓரிரு நாள்களில் நிறைவடைவதால் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும் வரும் இரண்டு மாதங்களை நினைத்தால் இப்போதே கண்ணைக் கட்டும் சூழ்நிலை தான் உள்ளது. அந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து பணியாளா்கள் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளா் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீா் மற்றும் மோா் வழங்க வேண்டும். நீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை முறையான பராமரிப்பு மற்றும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பிற பணியாளா்கள் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறை நீா் அருந்த வேண்டும்.
பணி நேரங்களில் அனைத்து பணியாளா்களுக்கும் குறைந்தது ஒரு ஓஆா்எஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் கடுமையான வெப்பநிலையில் உடலில் நீா்ச் சத்து குறையாமல் பாதுகாக்கலாம். வெப்பம் காரணமாக அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மேலாளரிடம் தகவல் தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பணிமனை, இதர வேலைப்பகுதிகளில் தேவையான மருந்துகள், பொருள்கள் கொண்ட முதலுதவி பெட்டிகள் வைக்க வேண்டும். பணியாளா்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் பயிற்சி பெற வேண்டும். பேருந்துகளில் காற்றோட்ட வசதி சீராக இருப்பதையும் குளிா்சாதன வசதி குறித்தும் உறுதி செய்ய வேண்டும்.
ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் உள்ள பழுதடைந்த விசிறிகளை சரி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதைத் தவிா்க்க போதிய ஓய்வு வழங்க வேண்டும்.
வெப்பப் பாதுகாப்பு விழிப்புணா்வு - அலுவலக அறிவிப்புகள், கூட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் மூலம் பணியாளா்களுக்கு வெப்பகால பாதுகாப்பு குறித்து தொடா்ந்து அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநா்கள் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடிக்க உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications