ஓட்டுக்கு வாங்கமாட்டோம் நோட்டு... தமிழகம் முழுவதும் 1 கோடி பேர் உறுதிமொழி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடி வாக்காளர்கள், 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 50 வாக்காளர்கள் வீதம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.'

மின்னணு எந்திரங்களை தயார்படுத்துதல், அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்தல், பாதுகாப்புக்கு 30 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினரை வரவழைத்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இந்த தடவை அதிக அளவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் இது தொடர்பான புகார்களை தொடர்ந்து அனுப்பின.
இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்யப்படுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான குழுக்களை தலைமை தேர்தல் கமிஷன் உருவாக்கியுள்ளது. இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த நாளை முதல் 15ம்தேதி வரை அதிரடி சோதனைகள் நடத்தவும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யவும், எந்த கட்சியிடமும் பணம் பெறாமல் வாக்களிக்க செய்யவும் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் அதிகாரிகள் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல் பிரசாரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று வாக்காளர்களை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் செய்யும் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடி வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் 10 மணிக்கு உறுதிமொழி ஏற்றனர். மற்ற துறைகளில் அந்தந்த துறை செயலாளர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் காலை ஆணையர் சந்திரமோகன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறுதிமொழி எடுத்தனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 50 வாக்காளர்கள் வீதம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்குச்சாவடிகள் தவிர தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.
ஒரு கோடி பேர் உறுதிமொழி
"ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம்.
மேலும் இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு சாதி, மத, இன, வகுப்பு, மொழி மற்றும் பணத்துக்கு ஓட்டு என எந்த ஒரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல் நேர்மையாக 16-5-2016 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் மனசாட்சியுடன் வாக்களிப்போம் என உறுதி மொழிகிறோம் என்று 1 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications