என் கட்சியில் 1 கோடி பேர் உறுப்பினர்கள்... யப்பா மாதவா... அளந்துவிடாதீங்க... மிடியலை!
தாம் தொடங்கிய கட்சியில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துவிட்டனர் என தீபாவின் கணவர் மாதவன் அளந்துவிட்டிருக்கிறார்.
சென்னை: தாம் தொடங்கிய கட்சியில் 2 நாட்களிலேயே 1 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துவிட்டனர் என்று தீபாவின் கணவரும் எம்.ஜே.டி.எம்.கே. கட்சியின் தலைவருமான மாதவன் அள்ளிவிட்டிருக்கிறார்.
சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதவன் அளித்த பேட்டியில், தீபா பேரவையில் அவரை தனித்து செயல்பட விடாமல் சில சக்திகள் இயக்குவதாகவும், அவரை காக்க தனி கட்சி தொடங்குங்கள் என்றும் அதிமுகவின் உண்மையான விசுவாசிகளும், என் நண்பர்களும் கேட்டுக் கொண்டனர். அதனாலேயே கட்சியைத் தொடங்கினேன்.
தற்போது கட்சியில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் அத்தனை உறுப்பினர்களும் வருகை தரவுள்ளனர். ஜெயலலிதா இருந்த போது பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால் தற்போது இல்லை.
கட்சியில் தீபா இணையலாம்
எங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஊழலற்ற அரசாங்கம் நடத்தப்படும். தீபா பேரவையை கலைத்து விட்டு தீபா வந்தால் வரவேற்பேன். முதல்வராகும் அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளதால் அவர் விருப்பப்பட்டால் முதல்வராகலாம். எனக்கு முதல்வராகும் கனவு இல்லை. அதிமுகவில் இரு அணிகள் கிடையாது, ஒரே அணிதான். ஏனெனில் இருவரும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள்.
தகுதியுள்ளவர்கள் முதல்வராகலாம்
ஜெயலலிதாவின் உறவினர் என்ற அரசியல் பின்புலம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் என் கட்சியில் முதல்வராகலாம். தீபா இல்லை என்றால் நான் இல்லை. சசிகலா, தினகரனிடம் பணம் பெற்றுக் கொண்டதாக கூறுவது மக்களுக்கு என் மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகத்தான்.
விரட்டியடிக்கப்பட்டோம்
ஜெயலலிதா முகத்தை காண அப்பல்லோ மருத்துவமனைக்கு நானும், தீபாவும் சென்றோம், பார்க்க விடவில்லை. போயஸ் கார்டனுக்கு வந்தோம், அங்கும் பார்க்க முடியவில்லை. இறுதியாக ராஜாஜி அரங்கத்துக்கு சென்றோம், அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டோம். பின்னர் எங்கள் மீது கருணை கொண்ட அதிகாரி ஒருவர் எங்களை திறந்துவிட்டார். அப்போதும் அவரது உடல் அருகே விரட்டியடிக்கப்பட்டோம்.
என் பேச்சை மீறினார்
ஓபிஎஸ் நாடகம் ஆடுகிறார் எனவே ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவரை சந்திக்க செல்ல வேண்டாம் என்று தீபாவிடம் கூறினேன். ஆனால் அதையும் மீறி தீபா சென்றார். தற்போது நான் கூறியதை போல் அவர் நாடகமாடுகிறார் என்பதை தீபா உணர்ந்திருப்பார். இவ்வாறு மாதவன் கூறினார்.