பிளஸ் 1 மதிப்பெண் இனி கணக்கில் வராது.. உயர் கல்விக்கு பிளஸ் 2 மார்க் போதும்: அரசு அறிவிப்பு
Recommended Video
சென்னை: வரும் கல்வியாண்டு முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார்.
இதுவரை பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு, தமிழக அரசின் முடிவையடுத்து, பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூகளுக்கு தலா 600 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் இணைக்கப்பட்டு, அதன் கூட்டு தொகை அடிப்படையில்தான், உயர் கல்வி மாணவர் சேர்க்கை என அறிவிக்கப்பட்டது.
செங்கோட்டையன்
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில், மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் காரணமாக, மன அழுத்தத்தில் உள்ளதாக புகார்கள் வந்தன. இந்த மன அழுத்தத்தை போக்கும் வகையில், பிளஸ் டூ மதிப்பெண்ணை வைத்து உயர் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
பிளஸ் டூ மொத்த மார்க்
இவ்வாண்டு பிளஸ் டூ தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 1200 என்று இல்லாமல் அறிவித்தபடி, 600 என்ற அடிப்படையில் இருக்கும். கடந்த வருடம், பிளஸ் 1 பாடம் மிகவும் கடினமானதாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன. எனவே அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அதே நேரம், பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு வழக்கம்போல நடைபெறும். அதில் மாற்றம் கிடையாது.
வரவேற்பு
இதுகுறித்து கல்வியாளர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், 11வது வகுப்பு ரிசல்ட் வந்தபோதே மாணவர்கள் மதிப்பெண் குறைவாக இருந்ததை கவனித்திருப்போம். இப்படி மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால், அண்ணா பல்கலை. உள்ளிட்டவற்றில் அட்மிஷன் கொடுக்கும்போது, முந்தைய மாணவர்களுக்கு அட்வான்டேஜ் வந்துவிடும். எனவே பிளஸ் டூ மதிப்பெண்ணை மட்டுமே உயர் கல்வி தகுதிக்கு போதும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எதிர்பார்க்கப்பட்டதுதான்.
மீண்டும்
கல்வித்தரம் உயர்ந்த பிறகு மீண்டும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில், உயர் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வைக்கலாம். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில், அது நடக்க வாய்ப்புள்ளது என்றார்.