நிலக்கோட்டையில் பயங்கரம்: நோட்டுப் புத்தகத்தை கிழித்ததற்காக +1 மாணவர் அடித்துக் கொலை- சக மாணவர் கைது
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நோட்டுப் புத்தகத்தைக் கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிளஸ் ஒன் மாணவர் வகுப்பறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக சக மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிலக்கோட்டை அருகே உள்ளது விளாம்பட்டி. இந்த ஊரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் ஒன் படித்து வந்தவர்கள் வினோத் மற்றும் சுந்தரபாண்டி. இதில் வினோத் எரியோடைச் சேர்ந்தவர். சுந்தரபாண்டியன் விளாம்பட்டியைச் சேர்ந்தவர்.
இன்று மதிய உணவு இடைவேளையின்போது சுந்தரபாண்டியன் நோட்டுப் புத்தகம் ஒன்றை வினோத் கிழித்து விட்டதாக தெரிகிறது. இதனால் வகுப்பில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
அப்போது, வினோத்தை, சுந்தரபாண்டியன் கடுமையாகத் தாக்கியதில் வினோத் மயக்கமடைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த விளாம்பட்டி போலீஸார் சுந்தரபாண்டியனைக் கைது செய்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விளாம்பட்டி மற்றும் நிலக்கோட்டையில் பதட்டம் நிலவுகிறது.