பிறந்த நாளன்று சோகம்.. வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பரிதாப பலி
பிறந்த நாளன்று வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பரிதாப உயிரிழந்தது.
சென்னை: சென்னை அடுத்த பெரவள்ளூரில் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெரவள்ளூர் சக்கரபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். முரளியின் மனைவி நித்யா. இந்தத் தம்பதிக்கு நிகிதா (4), ரோகன் (1) என இரு குழந்தைகள் உள்ளனர்.
ரோகனுக்கு செவ்வாய்க்கிழமை முதலாவது பிறந்த நாளாகும். இதையொட்டி, அவனது பிறந்த நாளை அங்குள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு முரளி குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
குழந்தை ரோகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான வேலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் முரளி குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்தினர். விளையாடிக் கொண்டிருந்த ரோகனை யாரும் கவனிக்கவில்லை. இதனிடையே ரோகன், அங்குள்ள குளியலறைக்குச் சென்றான். அங்கு பாதியளவு தண்ணீருடன் இருந்த வாளியை ரோகன் எட்டிப் பார்த்ததாக தெரிகிறது. இதில் திடீரென அந்த வாளிக்குள் ரோகன் தவறி விழுந்து மூழ்கினான்.
சிறிது நேரத்துக்குப் பின்னர், முரளி குடும்பத்தினர் ரோகனை தேடினர். அப்போது ரோகன், குளியலறையில் உள்ள வாளியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ரோகனை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், ரோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாடப்பட இருந்த ஒரு வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.