கனமழைக்கு 10 பேர் பலி: தமிழகத்தில் மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக லட்சத்தீவு பகுதியில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 48 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்தது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே கரையை சனிக்கிழமை மதியம் கரையைக் கடந்தது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

நாகையில் நிவாரணம்
நாகப்பட்டினம் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது 45 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சில இடங்களில் மரங்கள் விழுந்தன.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றினர். பலத்த மழையால் பயிர்களுக்கோ, வீடுகளுக்கோ பெரிய சேதம் ஏற்படவில்லை. சாலைகள் மற்றும் பாலங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சென்னையில் வெள்ளம்
சென்னையில் சனிக்கிழமை இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. மொத்தம் 120 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடைமழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் தேங்கியது. திருவல்லிக்கேணி, ராயபுரம் உள்ளிட்ட 92 பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மக்கள் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் மழை
தமிழகத்திலேயே மிக அதிகமாக மயிலாடுதுறையில் 220 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்சி - 140, சாத்தனூர் அணைக்கட்டு, வந்தவாசி, செம்பரம்பாக்கம் - 130; சென்னை, பூந்தமல்லி - 120; திருவள்ளூர், மதுராந்தகம், முசிறி, செஞ்சி, அரூர் - 110; திண்டிவனம், புதுச்சேரி, திருத்தணி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி - 100; ஊத்தங்கரை, பூண்டி, போச்சம்பள்ளி, மயிலம், தருமபுரி, தோகைமலை, பெரம்பலூர், விழுப்புரம், கொள்ளிடம், திருவண்ணாமலையில் 80 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

10 பேர் பலி
மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும் மின்சாரம் தாக்கியது, மரம் விழுந்தது போன்ற சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் எதிர்பாராமல் கிடைத்துள்ள இந்த மழையால் குடிநீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளது எனலாம். அதேபோல, இம்மழை விவசாயப் பயிர்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால், உதகையில் குவிந்துள்ள வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வேறு எந்த பகுதிக்கும் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

மழை நீடிக்கும்
கரையை கடந்த தாழ்வு மண்டலம் வலு இழந்து கேரளாவை யொட்டிய லட்சத்தீவுப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். பலத்தமழை பெய்ய வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யலாம். என்று எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications