திருப்பத்தூரில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் 10 பவுன் செயின் பறிப்பு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த தலைமை காவலரிடம் இருந்து மர்ம நபர்கள் 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறித்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்த தலைமை காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் தலைமை காவலர் லட்சுமியை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றும், கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தபோதிலும் இந்த குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் தான் திருப்பத்தூர் அருகே பெண் தலைமைக் காவலர் லட்சுமி என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரது 10 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தலைமைக் காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி லட்சுமி (வயது 42). லட்சுமி திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இருந்து தினமும் மொபட்டில் பணிக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்றும் அவர் மொபட்டில் பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து மொபட்டில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது தலைமை காவலர் லட்சுமியின் மொபட்டை இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென அந்த மர்ம நபர்கள், லட்சுமி அணிந்திருந்த தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். மொபட்டில் சென்றுகொண்டிருக்கும் போது செயினை பறித்ததால், லட்சுமி நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். தலையில் காயமடைந்த அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமி அணிந்திருந்த தங்க செயின் 10 பவுன் எடை கொண்டது ஆகும். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், தலைமை காவலர் லட்சுமியிடம் தங்க நகை பறித்தது யார் என்றும், அந்த கும்பலை பிடிக்கவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் அருகே தலைமை காவலர் ஒருவரிடமே மர்ம கும்பலினர் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்படும் சூழலுக்கு இதுபோன்ற சம்பவங்களே காரணம் என்றும், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications