ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி ஓனர் மீட்பு.. துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளும் சிக்கினர்!
செங்குன்றத்தில் லாரி அதிபரை கடத்திய 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: செங்குன்றத்தில் 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட லாரி அதிபரை மீட்ட போலீசார் துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் சமீப காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி காணப்படுகின்றன. இதனை ஒடுக்கவும், வன்முறையை கட்டவிழ்த்துவிடும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் அட்டகாசம் பெருகிக் கொண்டே செல்கிறது.
போலீசில் புகார்
நேற்று முன்தினம் கூட செங்குன்றத்தில் ஒரு கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. செங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். வயது 53. லாரி அதிபரான இவர், நேற்று முன்தினத்திலிருந்து காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் செங்குன்றம் போலீசிலும் புகார் அளித்தனர்.
போலீசுக்க போக வேண்டாம்
இந்நிலையில் நேற்றிரவு கணேசனின் தம்பி ராமச்சந்திரனுக்கு ஒரு போன் வந்துது. அதில் பேசிய நபர், கணேசனை ஒரு கும்பல் கடத்தி வைத்துள்ளதாகவும், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் கணேசனை மீட்க முடியும் என்றும், இது சம்பந்தமாக போலீசுக்கு போகவேண்டாம் என்றும் கூறி போனை வைத்துவிட்டார்.
சுற்றி வளைப்பு
இதையடுத்து அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் தயாரானார்கள். இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, நேற்றிரவே சென்னையை அலச ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் செல்போனில் பேசியதை வைத்து இன்று காலை 10 மணி அளவில் அவர்களின் இடத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள். வண்டலூர் - கூடுவாஞ்சேரி சாலையில் அவர்கள் அனைவரும் தங்கியிருந்த பங்களாவை போலீசார் சுற்றி வளைத்து கொண்டனர்.
துப்பாக்கி முனையில் 10 பேர் கைது
பின்னர் அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார் அங்கிருந்த 10 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இறுதியில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் கணேசனை போலீசார் மீட்டு குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.