தை பொங்கலும் வருது... ஊருக்கு போக 10 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே அறிவிப்பு
பொங்கலுக்கு ஊருக்கு செல்ல 10 சிறப்பு ரயில்களின் பட்டியலை தயாரித்துள்ளது தென்னக ரயில்வே.
சென்னை: சாதாரண ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில், பொங்கலுக்கு ஊருக்கும் செல்லும் மக்களுக்காக 10 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவிக்க தயாராகி வருகிறது. அதற்காக பட்டியலை தயாரித்து வருவதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 13ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்வோர் 4 மாதங்களுக்கு முன்பே செப்டம்பரில் ரயில் பயணத்திற்கான முன்பதிவுகளை செய்துவிட்டனர். இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலையில் இருந்தனர். மேலும், சிறப்பு ரயில்களை எப்போது ரயில்வே அறிவிக்கும் என்றும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி மக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்களை இயக்குவது போன்று, இந்த பொங்கலுக்கும் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்றும் இதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டு வருவதாகவும் தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சுமார் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். எந்தெந்த நாளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியாகும் என்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.