கள்ளச்சாராயம் குடித்து கணவன்- மனைவி பலி! தவிக்கும் 10 வயது சிறுமி! தனியே கதறும் சோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுடைய குழந்தை அழுத காட்சி காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிலரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 127 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி 37 பேர் இறந்துவிட்டனர். இன்னும் தொடர்ந்து பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் சாராய வியாபாரி கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் ஒவ்வொருவராக இறந்து வருவதாலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அழுது கொண்டு இருக்கும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள், பெண்கள் , திருநங்கை ஒருவர் என இறந்ததாக சொல்லப்படும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்த சோகம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ் உயிரிழந்த நிலையில் அவரைத் தொடர்ந்து அவரது மனைவி வடிவும் உயிரிழந்துவிட்டார்.
இவர்களது 10 வயது சிறுமி அப்பா, அம்மாவின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாறி மாறி போய் அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. அந்த குழந்தை யாரும் இன்றி ஆதரவற்ற நிலையில் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதோடு சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெறுவோருக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அது போல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications