சேலத்தில் ரயில் சிறைபிடிப்பு.. பொது சொத்தை சேதப்படுத்தியதாக 1000 பேர் மீது வழக்கு
சேலத்தில் ரயிலை சேதப்படுத்தியதாக 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ரயிலை சிறைபிடித்து சேதப்படுத்தியதாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெரியார் மேம்பாலம் அருகே, பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களால் ரயில் சிறைபிடிக்கப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே ரயில்வே காவல்துறையினர் ரயிலை மீட்டனர். இதுதொடர்பாக ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ரயில் இன்ஜினில் இருந்த லைட், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றதாக சேலத்தை சேர்ந்த பிரகாஷ், ராகவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட ரயிலில் ரூ.60 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.