சிறையில் ஜெ… 1006 தொண்டர்களுக்கு மொட்டை போட்ட எம்.எல்.ஏ
சேலம்: அம்மா சிறைக்குப் போனதில் இருந்து அதிமுகவினர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
எந்த துக்கமும் மூன்று நாளுக்கு மேல் தாங்காது என்பார்கள். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறை சென்றதில் தொடங்கி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை உண்ணாவிரதம், தீமித்தல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம், மொட்டை போடுதல் என கடவுளுக்கு பிராத்தனை என்ற பெயரால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதுவும் ஒரே நாளில் எம்.எல்.ஏ ஒருவர் ஒரே நாளில் 1008 தொண்டர்களுக்கு மொட்டை போட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்யும் இதுபோன்ற செயல்கள் அதிமுகவினரின் மேல் பொதுமக்களுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
பிரார்த்தனைகள் பலவிதம்
சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க வேண்டும், வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக தொண்டர்கள் பல வகைகளில் போராட்டம் நடத்தியும், கோயில்களில் மண்சோறு சாப்பிடுவது, அங்க பிரதட்சணம் செய்வது, தேங்காய் உடைப்பது போன்ற பல வகையான வேண்டுதல்களையும் நடத்தி வருகின்றனர்.
முருகனுக்கு 502 மொட்டை
இதில் ஒருவகையான வேண்டுதல் தான் மோட்டை, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலை கோயிலில் அதிமுகவினர் 502 பேர் மொத்தமாக மொட்டையடித்து ஜெயலலிதா விடுதலையாக சுவாமியை வேண்டிக்கொண்டனர்.
சேலத்தில் 1006
இந்நிலையில் சேலத்தில் 1006 தொண்டர்கள் தங்கள் வேண்டுதலை மொட்டையடித்து வழிபட்டனர். வீரபாண்டி எம்.எல்.ஏ., செல்வம் முன்னிலையில், காலை, 8:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, அ.தி.மு.க., தொண்டர்கள், 1,006 பேர், ஒருவர் பின் ஒருவராக மொட்டையடித்தனர்.
டோக்கன் வாங்கனும்
மொட்டை போட்ட அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. சித்தர் கோவிலில் உள்ள புனித கிணறுகளில் அவர்கள் குளித்தனர். டோக்கன் இருந்தால்தானே எம்.எல்.ஏவிடம் அதை கொடுத்து வசூலிக்க முடியும் என்கின்றனர் மொட்டை போட்டவர்கள்.
இதிலும் ராசி நம்பர்
இப்போது அம்மாவின் ராசி நம்பர் 7ஆம் எனவே 502, 1006 என ராசி நம்பர் பாத்து மொட்டையடிக்கின்றனர். பால்குடம் எடுக்கின்றனர் என்று பேசிக்கொண்டனர்.
சித்தர் கோவிலில்
பெண்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சித்தர் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பேசியபடி தலைக்கு தகுந்தபடி பணம் கொடுக்கப்படவே சந்தோசமாக கலைந்து சென்றனர் அதிமுகவினர்.