தஞ்சை அருகே 11 வயது சிறுவனை கொன்ற பாலிடெக்னிக் மாணவன்.. சடலத்தை தோண்டி எடுத்த போலீஸ்
தஞ்சை: தஞ்சை அருகே 11 வயது மாணவனை கொலை செய்து மண்ணில் புதைத்து வைத்த பாலிடெக்னிக் மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது 11 வயது சிறுவன் கிஷோர் கடந்த சில நாட்களாக திடீரென மாயமாகிவிட்டார்.
எங்கெங்கோ தேடியும் கிஷோர் கிடைக்காததால், சிவக்குமார் போலீசில் புகார் அளித்தார்.
மது அருந்திக் கொண்டிருந்த சில இளைஞர்கள்தான் கிஷோரை கொன்றுவிட்டதாக தனக்கு சந்தேகம் உள்ளதாக புகாரில் சிவக்குமார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் உரிய வகையில் விசாரணையை தொடக்கினர்.
அப்போது பாலிடெக்னிக் மாணவர் அரவிந்த் என்பவர் கிஷோரை கொலை செய்து, மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் தோண்டி பார்த்தபோது கிஷோர் உடல் இருந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடி போதையில் இருந்தபோது ஏதோ ஒரு ஆத்திரத்தில் இந்த கொலையை அரவிந்த் செய்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்துக்கொண்டுள்ளனர்.