பள்ளிச்சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை !
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 11 வயது பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம். பொருவாய் அருகே கல்குடிகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனைக்குட்டி என்பவரது மகள் பாக்கியலட்சுமி (11). இவர் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 27.7.2010 -அன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூக்கன் (என்ற) முருகன்(46) சிறுமி பாக்கியலட்சுமியை பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத்அலி பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 -ம் அபராதமும், அதைச்செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.