போர்க்கால வேகத்தில் மீட்புப் பணிகள்.. ஒரே நாளில் 12 உடல்கள் மீட்பு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் மீட்புப் பணிகள் இரவு பகலாக துரித கதியில் நடந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளைப் பார்த்து தங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவதற்காக மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திலும், மருத்துவமனைகளிலும் உறவினர்கள் குவிந்துள்ளனர்.

மழையும், வெயிலும்
விபத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க, கடந்த 4 நாட்களாக மீட்புக் குழுவினர் வெயில், மழையை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.

தீவிரமடையும் பணி
ஒரு சிறுமி, பெண் உள்பட நேற்று வரையில் 27 பேரை உயிருடன் மீட்டனர். 34 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அதில் நேற்று இரவு வரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கையைக் காட்டி உதவி கோரிய பெண்
நேற்று காலை 7.30 மணியளவில் இடிபாடுகளுக்கிடையே ஒரு பெண்ணின் கை வெளியே தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பின் அந்த பெண்ணை மீட்பு குழுவினர் நவீன கருவிகள் கொண்டு உயிருடன் மீட்டனர்.

கீழ்த்தளம் முழுமையாக சிதையவில்லை
கட்டடத்தின் கீழ்த்தளம் முழுமையாக உடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அங்கு பலர் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. எனவே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications