நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரத்தில் 12 பேர் கொலை - பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர்கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் சமீப காலமாக கொலை களமாக மாறி வருகிறது. பெரும்பாலும் கள்ளகாதல், நடந்தை சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள்,குழந்தைகள் வெளியே அச்சப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 12 கொலைகள் நடந்துள்ளன. பேட்டையை சேர்ந்த ஜான் கணபதி அன்னாள் என்பவர் அபிசேகப்பட்டி கால்நடை பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த இரண்டாம் தேதி நகைக்காக கொடூரமாககொலை செய்யப்பட்டார்.
அதே நாளில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த நவின்குமார் என்பவர் தனது மனைவி ராஜபுஷ்பம் என்பவரை நடத்தை சந்தேகத்தின் பேரில் வெட்டி கொன்றார்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் அவரது மகன் லட்சுமணன் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் தந்தை வெட்டி கொலை செய்தார்.
திருச்செந்தூர் பொறியியல் கல்லூரி மாணவரான அப்துல்லா என்பவர் கடந்த 2ம்தேதி மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தென்காசி மத்தளம்பாறையை சேர்ந்த நாகராஜ் மனைவி சொர்ணம் குற்றாலம் ஐந்தருவியில் உள்ள பண்ணை வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த முத்து என்பவர் ஆறுமுகமங்கலம் சுடலை கோயிலில் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 5ம்தேதி குளத்தூர் வைப்பார் காட்டு பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
புளியங்குடியை சேர்ந்த பிரபல ரவுடி கலியன் என்பவர் சங்கரன்கோவிலில் பைக்கில் வந்த போது வெட்டி கொல்லப்ட்டார். 6ம் தேதி பணகுடியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் தனது மனைவி அஜிதாவை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார்.
இந்த கொலைப்பட்டியல் மேலும் நீண்டே கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.