திருவள்ளூர் அருகே பைக் மோதி சிறுமி பலி.. அதிர்ச்சியில் பெரியப்பாவும் மரணம்
சாலை விபத்தில் சிறுமி பலியானதால் அதிர்ச்சியில் அவளது பெரியப்பாவும் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர்: சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது பைக் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து சிறுமி பலியான சம்பவம் கேட்டு அவளது பெரியப்பாவும் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே.பேட்டை அருகே ஜிகுலூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் ஸ்வேதா. 12 வயதான இச்சிறுமி தங்கள் கிராமத்திலுள்ள கோயில் திருவிழாவை காண சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் பைக் ஓட்டி வந்த ஒருவர், எதிர்பாராதவிதமாக ஸ்வேதா மீது மோதினார். இதில் நிலைகுலைந்து தடுமாறி விழுந்த ஸ்வேதா, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்த தகவல் அவரது வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது சிறுமியின் மீது மிகுந்த அன்பை வைத்திருந்த அவரது பெரியப்பா வீரராகவ்ராவ் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட உறவினர்கள் பதறியடித்து கொண்டு உடனடியாக அவரை சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 60. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பைக் ஏற்றி கொன்றுவிட்டு தப்பி சென்ற நபரை தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications