தேர்தல் முன்னெச்சரிக்கை: சென்னையில் முக்கிய ரவுடி உட்பட 1,225 பேர் கைது... 1,710 துப்பாக்கிகள் ஒப்பட
சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 1,225 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,710 பேர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
இன்று தொடங்கி ஒன்பது கட்டங்களாக வரும் மே மாதம் 12ம் தேதி வரை 16வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் 24-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சுமார் 1,225 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1225 பேர் கைது...
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட நாளிலிருந்து தமிழக போலீசார் அதிரடி ரவுடிகள் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, கோர்ட் வாரண்ட் பிறப்பிக்கப் பட்டு தலைமறைவாக இருந்த 1225 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர்.

345 பேர் தலைமறைவு...
இவர்களில் 400 பேர் பயங்கர ரவுடிகள் என ஆவணங்கள் சொல்கின்றன. வாரண்ட் பிறப்பிக்கப் பட்டவர்களில் இன்னும் 345 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாகனச் சோதனையில்...
அதேபோல், வாகனச் சோதனையில் கடுமை காட்டி வரும் போக்குவரத்து போலீசார் கடந்த சனிக்கிழமையன்று மட்டும் சந்தேகத்தின் பேரில் 400 பேரையும், போதையில் வாகனம் ஓட்டியதாக 118 பேரையும் கைது செய்துள்ளனர்.

ரவுடி பாலு கைது...
போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு முறை குண்டர் சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆணையர் உத்தரவு...
அதேபோல், லோக்சபா தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தர விட்டிருந்தார்.

ஒப்படைப்பு...
சென்னையில் மட்டும் சுமார் 2,800 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால், அவர்களில் 1,710 பேர் மட்டுமே இதுவரை காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனராம்.

பறிமுதல் செய்யப்படும்...
இதனால், மீதமுள்ளவர்களும் வரும் 15ம் தேதிக்குள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்படைக்காதவர்களை கணக்கெடுத்து அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திரும்பத் தந்துடுவோம்....
லோக்சபா தேர்தல் முடிவடைந்ததும் போலீசார் இந்த துப்பாக்கிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications