நெல்லையில் பள்ளி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என்ன?
நெல்லை அரசு விடுதி மாணவர் கொலையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: திருநெல்வேலி அரசு விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வல்லநாடு அருகே படுகையூரை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் வெங்கடேஷ். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள ஆதி திராவிடர் மாணவர் நல விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விடுதியின் வெளியே மர்ம நபர்கள் இரண்டு பேர், வெங்கடேசை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் வெங்கடேஷ் துடி துடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு விடுதி மாணவர்கள் மற்றும் வார்டன் ஆகியோர் ஓடி வந்தனர்.
அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திடுக் தகவல் கிடைத்தது. அதன்படி, கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் தன்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அதே மாணவியை பள்ளியில் படிக்கும் தச்சநல்லூர் அழகநேரியை சேர்ந்த சுந்தர் (17) என்ற மாணவரும் காதலித்துள்ளார். இதனால் சுந்தருக்கும் வெங்கடேசுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் வெங்கடேசும் அவரது நண்பர்களும் சுந்தரை வழிமறித்து தாக்கினார்களாம். இது சுந்தருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதை அவர் தனது உறவினரும் நண்பருமான நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் உள்ள பழக்கடை ஊழியர் செல்வம் (24) என்பவரிடம் கூறினார். அவர் வெங்கடேசை கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் நேற்று இரவு வெங்கடேஷ் தங்கி உள்ள விடுதிக்கு சென்றனர். அங்கு சுந்தர் மறைந்து கொள்ள, செல்வம் மட்டும் விடுதிக்குள் சென்று வெங்கடேசை அழைத்துள்ளார். இதனால் அவர் வெளியில் வந்தபோது 2 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.