உயிர் பலியுடன் முடிந்த நீட் தேர்வு- சோதனை என கூறி மாணவிகளுக்கு கடும் சித்ரவதை!
நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
Recommended Video
சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் உயிர்பலியுடன் முடிவடைந்துள்ளது. மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இத்தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் நேற்று இரவு முதலே தேர்வு மையங்களில் குவிந்தனர்.
வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் பெற்றோர்களுடன் விடிய விடிய தேர்வு மையங்களை தேடி சென்றடைந்தனர். கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
இம்மாநிலங்களில் தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் கடும் கெடுபிடிகளுடன் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1,07,288 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 2,255 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் 170 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு பின்னர் வந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவிடாமலும் கெடுபிடி காட்டியது சிபிஎஸ்இ நிர்வாகம்.
அத்துடன் சோதனை என்ற பெயரில் மாணவிகளை கடுமையான சித்ரவதைகளுக்குள்ளாக்கியது சிபிஎஸ்இ நிர்வாகம். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகனை கேரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்றார். அங்கு மாரடைப்பால் கிருஷ்ணசாமி மரணித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.