14 டன் புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன.... ஆனா, கொடுப்பாங்களா?
சென்னை: நாசிக்கில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.
மொத்தம் 14 டன் நோட்டுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய நோட்டுகள் எப்போது முதல் விநியோகத்துக்கு வரும் என்பதை யாரும் கூறவில்லை.

திங்கள்கிழமை முதல் வங்கி, ஏ.டி.எம். மையங்கள் மூலம் விநியோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செல்லாத பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது. 79 பேர் வரை இந்த செயற்கை பணத் தட்டுப்பாட்டுக்கு பலியாகிவிட்டனர்.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வினியோகம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் ரூ. 100, ரூ. 50 ரூ. 20 , ரூ. 10 நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் விநியோகப்பட்டன. ஆனால் அவையும் கூட பெயருக்கு ஓரிரு நாட்கள் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது. இதனால் கடும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு பணப் புழக்கம் குறைந்தது. வங்கியிலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு பணம் பரிமாற்றம் முடங்கியது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி புதிய 500 ரூபாய் நோட்டு டெல்லியில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த நோட்டுக்களை யாரும் பார்த்ததாகக் கூடச் சொல்லவில்லை. இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியான படங்களைப் பார்த்ததோடு சரி.
ஒவ்வொரு மாநிலமாக 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்னும் பொதுமக்கள் கைகளுக்கு அந்த நோட்டுகள் செல்லவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானப் படை விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அவை 2 கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் 2 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் அதன் பிறகே ஏடிஎம் மையங்களில் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பண ஒழிப்பு அறிவிக்கப்பட்ட போதும், இப்படித்தான் கூறினார்கள். அதாவது புதிய 2000 மற்றும் 500 தாள்கள் 11-ம் தேதியிலிருந்தே கிடைக்கும் என்றார்கள். இன்று தேதி 26. இன்னும் 99 சதவீத ஏடிஎம்களும் மூடித்தான் கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications