காலியாகக் கிடக்கும் 1400 கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்கள் – மாணவர்கள் எதிர்காலம்?
சென்னை: தமிழகத்தில் 1400 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 2600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஐ.டி துறையின் தாக்கத்தால் மாணவர்கள் கம்யூட்டர் சயின்ஸ் மீது ஆர்வம் காட்டியதன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் பத்தாண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் தொடரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பற்றாக்குறை பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கடுமையாக பாதிக்கிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் சார்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்ற காரணம் பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. மாணவர்களின் நிலை அறிந்து பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
2600 பள்ளிகளில் தற்போது 1200 பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள பள்ளிகளில் போதிய கல்வித்தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு வாரத்திற்கு மூன்று நாட்கள் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
ஆசிரியர்கள் இல்லாத சில பள்ளிகளில் ஆய்வகங்கள் பூட்டப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் காலியாக உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2013 அக்டோபரில் ஹைகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் பரசுராமன் கூறுகையில் ''சுமார் 1400 பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இதனால் அரசு பள்ளிகளை நம்பி வரும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம்'' என்றார்.












Click it and Unblock the Notifications